திங்கள், 4 பிப்ரவரி, 2013

Life of Pi 3D Movie



 இந்த படம் பார்த்து கிட்டதட்ட ஒரு மாதம் மேலே இருக்கும். ஆனால் என்னில் இப்படம் உருவாக்கிய தாக்கம் மிகப்பெரியது. அதற்கான விடையை தேடிக்கொண்டே இருக்கிறேன், சிக்கியப் பாடில்லை. உங்களுடன் பகிர்ந்தால் அதற்கு விடை கிடைக்குமா என்பதன் விளைவே இப்பதிவு. 


இதுவரை 3D படம் என்றால், மை டியர் குட்டிச்சாத்தான்’ படம் தான் என் நினைவின் அடுக்கில் இருந்தது. ஒரு ஐஸ்கிரீமும், திராட்சை தட்டும் நம் கண்முன் வருவதும், ஈட்டி நம்மை நோக்கி வீசுவது போன்ற ரெண்டு காட்சிகள் தான் 3டியின் பிம்பமாக நம் ஏனைய பேருக்கு இருக்கும், எனக்கும் அப்படியே. ஆதலால் பெரிய எதிர்ப்பார்ப்பு ஒன்றும் இல்லாமல் சென்றேன்.

ஆனால் இப்பொழுது இப்படம் 3
Dயில் பார்த்த அனுபவத்தை, வர்ணிக்க வார்த்தையை தேடிகிறேன். பெயர் போடும் டைட்டில் கார்டில் தொடங்கி முடியும் வரை அனைத்தும் 3Dயே. அந்த அனுபவத்தை உங்களுக்கு வார்த்தகளால் ஒரளவேனும் கடத்த முயற்சிக்கிறேன். 3Dயின் பயனால் நாமும், கதையில் வரும் கதாபாத்திரத்துடன் அவர்களுடன் பயனித்த அனுபவத்தை கொடுத்தது. அனைத்து காட்சிகளும் நாம் அவர்களின் அருகிலிருந்து கண்ட அனுபவத்தை கொடுக்கும். இது ஒரு திரைப்படம் என்ற உணர்வே இல்லாமல் செய்தது. Hats off. இதற்கு முன்பு ICE AGE-4 படத்தை முழு 3Dயில் யோகவ்வுடன் கண்டுள்ளேன், ஆனால் இந்த பிரம்மிப்பு தரவில்லை. ஒரு வேளை, அது கார்டூன் கேரக்டர் என்பதினால் கூட இருக்கலாம். இனி படத்திற்கு போகலாம். இதுவரை நீங்க இப்படத்தைப் பார்க்கவில்லை என்றால் உடனே காணுங்கள், நான் சொல்வதை உணர்வீர்கள். (இந்தியாவில் முழு 3dயாக இல்லை என நண்பர்களின் மூலமாக அறிந்தேன்).

என் நண்பர் மற்றும் அண்டை வீட்டுக்காரர் திரு.செந்தில் சொல்லித்தான் இப்படத்திற்கு செல்ல முடிவானது. ஆங்கிலப் படத்தில் நமக்கு இருக்கும் பெறும் பிரச்சனையே ஆங்கிலம்தான்JJJ :) ஔவையார் ஆரம்ப பள்ளியில் படித்ததின் காரணமாக, ஆங்கில சப்-டைட்டில் இல்லையென்றால் நமக்கு சங்கு தான். தூள் படத்தில், விவேக் சொல்ற மாதிரி படமாடா முக்கியம், காட்சிய பார்ரா வகையரா தான், நான். இங்கு அரபி சப்-டைட்டில் வேற போடுவாங்க, என் நிலையை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். இது இந்தியர்கள் பேசும் ஆங்கில படமாதலால் தன்யனானேன். JJJ :) அவங்களும் நம்ம பட்லர் இங்கிலீஷ் தான் பேசுறாங்க, என்னை போல.


Yann Martel என்ற எழுத்தாளரின் ‘Life of pi’ நாவலை தழுவிய படம். பொதுவாக நாவலை திரைப்படமாக எடுத்தால், படிக்கும்போது கொடுக்கும் பிரம்பிப்பை கொடுக்க தவறவிடுவார்கள் எனற கருத்துண்டு. மேலும் அந்த நாவலாசிரியரின் எண்ணத்தை, மையத்தை தொலைத்துவிடுவார்கள். ஆனால் இந்த படத்தில், நாவலில் என்ன இருக்குமோ அதை அப்படியே இம்மி பிசகாமல் திரையில் அப்படியே கடத்திய அருமையான படம். உடனே ’துப்பறியும் சாம்பு’ மாதிரி, நீ படிச்சியா என்று என்னை கேட்கக்கூடாது. ஆத்தா, கண்னை குத்திடும் :) :) சாக்குரதை JJJ :). என் பதிலை முடிவில் சொல்கிறேன். இன்னுமாடா கதைக்கு போகலைன்னு கேட்கப்படாது, ஆங்...!!!

கதையை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். தன் பெற்றோருடன் சிறுவயது பகுதியை ஒன்றாகவும், கடலில் தனியாக தத்தளிக்கும் பகுதியை இரண்டாகவும், இறுதியாக பை மீண்ட கதையை ஜப்பான் இஸ்சூரன்ஸ் நபர்களிடம் விவரிக்கும் பகுதி என சொல்லலாம். இதில் என்னை ஆட்டிப்படைத்தது மூன்றாம் பகுதி தான். விரிவாக கீழே...!

 

(Pi) பை’யிடம் ஒரு அற்புதமான (கடவுள் இருப்பின்) கதை இருக்குமென்று பையின் மாமா கூறியதாக ஒரு உள்ளூர் கனேடிய எழுத்தாளன் அனுகுகிறான். பை’ தன் பால்ய நாட்களை, தான் கடந்து வந்த கதையை கூறுவதே முழுப்படம். கதையின் நாயகன் சிறுவன் பை, அவன் அண்ணன் ரவி, பாண்டிச்சேரியில் விலங்கியல பூங்கா (Zoo) ஒன்றை நடத்திவரும் பையின் பெற்றோர்கள் என ஒரு அழகிய குடும்பம் பையுடையது. பையின் பெயர்காரணம் சுவாரஸ்யமானதும் கூட. தனது மாமா, பிரான்சில் உள்ள Piscine Molitor என்ற ஒரு நீச்சல்குளத்தால் ஈர்க்கப்பட்டு இவருக்கு Piscine Molitor Patel என பெயரிடுகிறார். சிறுவயதில் எல்லோரும் இவனை பிஸ்ஸிங், பிஸ்ஸிங் படேல்’ என்று கிண்டலடிக்க இவன் தன் பெயரை Pi patel என மாற்றிக்கொள்கிறான். கணிதத்தில் ’π’ (pi) என்றால் முடிவடையாத ஒரு நெம்பர் என்று பொருள்படும். படத்தின அடிநாதத்திற்கும் இதற்கும்கூட சம்பந்தம் உண்டு.

தன் தந்தை ஒரு நாத்திகவாதி மற்றும் எதையும் அலசி ஆராய்ந்து, பிரித்து பார்த்து, அறிவியல் ரீதியாக பொருள் கொள்பவர். தன் மகன்களுக்கும் அவ்வாறே கற்றுத் தருகிறார். பை பிறப்பால் ஹிந்துவாக இருந்தாலும், தன் 12ஆம் வயதில் கிருஸ்துவமும், இஸ்லாமும் அறிமுகமாகிறது. இளம்வயதிற்குரிய கேள்விகளுடன் அனைத்து கடவுளையும் நேசிக்க்கிறான்’; அதனால் அனைத்து மதத்தையும் ஒரே சமயத்தில் பின்பற்ற தொடங்குகிறான். மென் நகச்சுவையாக அருமையாக காட்சிப்படுத்திருக்கிறார்கள்.
 

பையின் பெற்றோர்கள், குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வேண்டி, கனடா சென்று விலங்குகளை விற்றுவிட்டு குடியேர திட்டமிடுகிறார்கள். ஜப்பான் கப்பலொன்றில் அனைவரும் பயனிக்கிறார்கள். எதிர்பாரா விதமாக இரவு நேரத்தில் தாங்கள் பயனித்த கப்பல் புயலில் சிக்குகிறது. தன் துடுக்குதனம் காரணமாக புயலைக்காண, கப்பலின் மேல்தளத்தில் வரும் பை, கப்பலுக்கு சிக்கலென்று உணர்கிறான். தன் குடும்ப நபர்களை காப்பாற்ற எண்ணுகையில் கப்பல் சிப்பந்திகள் இவனை லைப் போட்டில் (Life Boat) தூக்கிவீசுகிறார்கள்.  தற்செயலாக அடிப்பட்ட வரிக்குதிரை அதே படகில் விழுந்து பயணிக்கிறது. ஒரு சில வாழைப்பழ கொத்தில் ஓரங்குட்டானும் தப்பி இதே படகில் பையிடம் வந்தடைகிறது. 

 

தன் குடும்பத்தை காப்பாற்ற முடியா துயரத்தில் பை, இரவு முழுதும் படகின் பாதி மூடப்பட்ட தார்பாயின் மேலே படுத்து அழுது உருகுகிறான். அடுத்த நாள், திடீரென அதன் அடியில் இருந்து ஓநாய் வெளிவந்து, வரிக்குதிரையையும் ஓரங்குட்டானையும் பசிக்காக சாகடிக்கிறது. யாரும் எதிர்பாரா நேரத்தில் ரிச்சர்ட் பார்க்கர் என்ற வங்கால புலி ஒன்று அதே தார்பாயின் அடியில் இருந்து வந்து நரியை கொல்கிறது. இப்பொழுது மிஞ்சிருப்பது புலியும், பை என்ற 16வயது சிறுவன் மட்டுமே. 
புலி பை’யை கொல்ல காத்திருக்க, ஒரு சிறு மிதவையை தயாரித்து அந்த படகின் கூடவே பயனிக்கிறான். இப்படியே செல்லும் பயணத்தில் புலியை அடக்க கற்றுக்கொள்கிறான். ஒரு உயிரின விழுங்கித் தீவில் இருந்தும் தப்பித்து, எப்படி தன்னை காத்துக்கொண்டு 227 நாட்கள் புலியுடன் வாழ்ந்து மீண்டு மெக்சிக்கோ நாட்டிற்கு வந்தான் என்பதே மீதிப் படம். 


மெக்சிக்கோ நாட்டில் கரையொதுங்கி சிகிச்சை பெரும் பையிடம், ஜப்பான் நாட்டு இன்சூரன்ஸ் நபர்கள் கப்பல் கவிழ்ந்த காரணத்தை கோருகிறார்கள். கப்பல் எப்படி கவிழ்ந்தது என சிறுவனான தனக்கு தெரியாது என்றும், தான் சந்தித்த (மேலே சொன்ன) அனைத்தையும் சொல்கிறான். காப்பீட்டாளர்கள், இது எல்லாம் நம்ம முடியா கதையாக இருக்கிறது, ஏனெனில் வாழைப்பழம் மிதக்காது, அதனால் ஓரங்குட்டான் வந்திருக்க வாய்ப்பில்லை எனவும், புலியுடன் 227 நாட்கள் வாழ்வது சாத்தியம் இல்லை எனவும், உயிரின விழுங்கி தீவு ஒன்று உலகத்தில் இல்லை எனவும் சொல்கிறார்கள். காப்பீட்டாளர்கள், தாங்கள் பைக்கு உதவ வந்துள்ளதாக கூறி, நம்பும்படியாக உண்மையை சொல்லச் சொல்கிறார்கள்.

உடனே பை, இன்னொரு சுவாரஸ்யமில்லாத கொடூரமான கதை சொல்கிறான். தானும், தன் அம்மாவும் லைப் போட்டில் படகில் தப்பித்ததாகவும், அதே படகில் கால் உடைந்த மற்றொரு பயணியும், கப்பல் சமையல்காரனும் இருந்தார்கள் எனவும் கூறுகிறான். சமையல்காரன், கால் உடைந்த பயணியை கொன்று இரையாக்கினான் எனவும், பின்னொரு சண்டையில் தன் அம்மா தன்னை படகின் ஒரத்திற்கு போகுமாறு கூறியதாகவும், அச்சம்பவத்தில் தன் அம்மாவை சமையல்காரன் கடலில் தள்ளிவிட்டான் எனவும், உடனே பை தன் கையில் இருந்த கத்தியை கொண்டு சமையல்காரனைக் கொன்று, மனித மாமிச உண்டு, தான் தப்பி மெக்சிக்கோ கரை ஒதுங்கியதாக கூறுகிறான். ஜப்பான்கார்ர்கள் ஒன்றும் சொல்லாமல் எழுந்து செல்கிறார்கள். பை தன் கதையை கனேடிய நாவலாசிரியரிடம் சொல்லி முடிக்கிறான். 


 இங்குதான் நான் முதல் பத்தியில் கூறிய விடை தெரியா, என்னை உலுக்கிய சம்பவம் வருகிறது. நாவல் ஆசிரியன் பையிடம், இரண்டாவது சொன்ன கதையில் வரிக்குதிரையாக அந்த சகபயணி, ஓரங்குட்டானாக உன் தாய், ஓநாயாக சமையல்காரன், ரிச்சேர்ட் பார்க்கர் என்ற வங்கால புலியாக நீயா (பை) என கேட்கிறான்.

அதற்கு பை பதில் அளிக்காமல், நான் கூறிய இரண்டு கதைகளிலும், கப்பல் கவிழ்கிறது, என் குடும்பம் இறக்கிறது, நான் தத்தளிக்கிறேன், பின்பு மெக்சிக்கோவில் கரை ஒதுங்குகி உயிர் பிழைக்கிறேன் என கூறுகிறான். உனக்கு எது வேண்டும் என முடிவு நீயே எடுத்துக்கொள், என ஆசிரியரிடம் கூறுகிறான். அதற்கு ஆசிரியன், புலி இருக்கும் கதையை விரும்புவதாக சொல்ல, பை கூறும் வாக்கியம் and so it goes with God’. பிறகு நாவலாசிரியன் ஒரு ஆர்வ மிகுதியில் இஸ்சூரன்ஸ் ஃபைலை எடுத்து, அவர்கள் என்ன தீர்ப்பு எழுதிருக்கிறார்கள் என பார்க்கிறான், அதிலும் புலியுடன் 227 நாட்கள் உயிர் வாழ்ந்து தப்பிக்கிறான் பை என முடிகிறது படம்.


இந்த கதையில் என்ன இருக்கிறது என்றால், இதை எப்படி காட்சிப் படுத்திருக்கிறார்கள் என்பதில் தான் சூட்சமமே.. ஒவ்வொரு நாள் முடிந்த பின்னும், பையின் உடல்மொழி மாற்றம், பேச்சின் வீரியம் குறையும் தன்மை, விசில் ஊதும் சத்த்தின் ஓசை என பார்த்து பார்த்து செதுக்கிருக்கிறார்கள். இதை திரையில் கண்டால்தான் உணர முடியும். நீங்க பலபேர் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். மேலும் அந்த புலி ஒரு கிராப்பிக்ஸ் புலி, சத்தியமா நம்ப மாட்டோம். அவ்ளோ ஒரிஜினல் போல இருக்கு & மேலே சொன்னது போல் 3D.

இவை அனைத்திற்கும் மேலே, நான் குறிப்பிடும் விடை தெரியா கேள்விகள் நிறைந்த கடைசி பகுதி.... அவரவர் எண்ண ஓட்டத்திற்கு முடிவை தேர்தெடுத்துக்கொள்ளலாம். நன்றாக கவனித்தால், பை இறுதியில் எது உண்மை, எது பொய் என்று கூறுவதில்லை. உனக்கான முடிவை நீயே எடுத்துகொள் என்றுதான் நாவலாசிரியரிடம் சொல்கிறான். பகுத்துத்தறிவோடு பார்த்தால், 227 நாட்கள் பசியுடன் இருக்கும் ஒரு வங்கால புலியுடன் வாழ சாத்தியமே இல்லை, அதுவும் ஒரே படகில். ஆகையால் அவன் சொல்லும் இரண்டாம் கதைக்கான சாத்தியம் தான் ஜாஸ்தி. அறிவியல் என்பது மறுக்கமுடியா உண்மை. எதையும் பிரித்து பார்த்து நிறுபித்த ஒன்று. தன்னில் இருக்கும் மிருகம் வெளிவந்து, சைவமானவன் மனித மாமிசம் உண்டு உயிர் பிழைத்தான் என்பதே ஏற்புடையதாக இருக்கும்.

Director, Irfan Khan, Thabu, Suraj Sharma
இல்லை, முதல் கதை போல நடக்க சாத்தியம் இருக்குமென்றால், Believing the Unbelievable என்பதில் உடன்பாடு கொண்டவராவோம். அதனால் தான் ‘and so it goes with God’ என்று பை இறுதியில் கூறுகிறான்.  நமக்கும் மேல் ஒன்று இருக்கு என்ற சக்தி, ஞானம்.

காதல் போல, கடவுளும் கண்ணுக்கு புலப்படாதவர் என பொருள் கொள்ளலாம். எல்லாவற்றிக்கும் அறிவியலை திணிக்காமல், உ.தா காதல் என்பது மூலையில் ஓடும் திரவியம் என்று கூறாமல், அது ஒரு புலப்படாத உணர்வு எனலாம். பை (22/7) என்பதே கணித்ததில் முடிவில்லா மிஸ்டரி நம்பர். அது போல நம் வாழ்க்கையில் இருக்கும் பல விடை தெரியா முடிச்சுகள் கொண்டது...!!!

துபாயில் ரிக்கார்ட் ஹிட் இந்த படம். கிட்டத்தட்ட இரண்டு மாதம் தாண்டியும் இன்னும் சக்கப்போடு போடுகிறது, அரங்கம் நிறைந்த காட்சிகளோடு. மேலும் இப்படம், 11 ஆஸ்கார் அவார்ட்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீங்க இதுவரை இப்படத்தை காணவில்லையென்றால் உடனே காணுங்கள்.

4 கருத்துகள்:

  1. badikum pothu padam paartha pothu iruntha padapadappu irunthathu.......


    \guys !! this film shouldnt miss in life time....!!
    must watch in full 3d only

    பதிலளிநீக்கு
  2. வாழ் நாள் அனுபவம், இப்படம் 3dயில் கண்டீர்களேயானால்...

    பதிலளிநீக்கு
  3. While reading, I had a visual experience.. Great narration,Amazing film.. hats off to the novel writer

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அபி. இப்போதான் எழுத ஆரம்பித்த எனக்கு உத்வேகம் தருகிறது....

      நீக்கு